தமிழ்நாடு

“சாத்தூர் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை”.. 2-ஆம் கட்ட ஆய்விலும் உறுதி

Rasus

சாத்தூரில் ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிறந்த குழந்தையிடம் எந்த பாதிப்பும் இல்லை என்பது இரண்டாம் கட்ட ஆய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜனவரி 17-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு உள்ளதா என கண்டறிய மார்ச் 4-ஆம் தேதி பி.சி.ஆர். எனப்படும் சோதனை நடத்தப்பட்டது. அதில் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது.

இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மதுரை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையிலும் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3-ஆம் கட்ட பரிசோதனை குழந்தை பிறந்ததில் இருந்து 18-ஆவது மாதம் நடைபெறும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.