தமிழ்நாடு

மருத்துவரும் இல்லை; அமரர் ஊர்தியும் இல்லை: ஆம்பூர் மருத்துவமனையின் அவலம்

webteam

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த ராஜ்குமாரின் உடலை எடுத்து செல்ல அமரர் ஊர்தி கூட இல்லாமல் குடும்பத்தினர் சிரமத்திற்கு ஆளாகினர்.

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுமி உட்பட 2 பேர் பலியான சம்பவம் நேற்று நிகழ்ந்தது. காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட வைஷ்ணவி என்ற சிறுமியும், கார் விபத்தில் படுகாயமடைந்த பச்சகுப்பத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஆம்பூர் மருத்துவமனையிலுள்ள அமரர் ஊர்தி பழுதடைந்திருப்பதால், வேலூரிலிருந்து தனியார் ஊர்தி வரவழைத்து ராஜ்குமாரின் உடலை குடும்பத்தினர் எடுத்துச்சென்றனர். மருத்துவமனையில் பணியில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து 2 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் சாந்தி தெரிவித்தார். விசாரணைக்கு பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.