மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், மேயர் மகாலட்சுமி pt web
தமிழ்நாடு

நம்பிக்கையில்லா தீர்மானம் கேட்டுவிட்டு சுற்றுலா சென்ற கவுன்சிலர்கள்; தப்பித்தார் காஞ்சிபுரம் மேயர்!

PT WEB

செய்தியாளர் இஸ்மாயில்

சில மாதங்களிலேயே எழுந்த பிரச்சனை

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது. மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 32 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 33 வார்டுகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும், பிற இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். சுயேட்சைகள் பலரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

MayorMahalakshmi DMK

திமுக சார்பில் மகாலட்சுமி யுவராஜ் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக திமுகவை சேர்ந்த சூர்யா என்பவரும் போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தும் மேயர் தேர்தலில் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரத்தில் முதல் முறையாக மேயராக பதவி ஏற்றார். காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி பொறுப்பேற்று இருந்தாலும் சில மாதங்களிலேயே கவுன்சிலர்களால் பிரச்சனை எழத் துவங்கியது.

குற்றச்சாட்டுகளை அடுக்கிய கவுன்சிலர்கள்

ஒவ்வொரு முறை மாமன்ற கூட்டம் நடைபெறுகின்ற பொழுதும் கூட்டம் சலசலப்புடன் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர். திமுக தலைமை கழகம் சார்பில் அதிருப்தி திமுக கவுன்சிலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் நேரு முன்னிலையிலும் தலைமை நிலைய நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

தொடர்ந்து, `மாநகராட்சி செயல்பாடுகளில் மேயரின் கணவரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. சரியாக நிதி ஒதுக்குவதில்லை... வார்டு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை' என மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று 17 திமுக கவுன்சிலர்கள், ஏழு அதிமுக கவுன்சிலர்கள், ஐந்து சுயேச்சை கவுன்சிலர்கள், இரண்டு பாமக கவுன்சிலர்கள் உட்பட மொத்தம் 33 பேர், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனைச் சந்தித்து மனு அளித்தனர்.

வாக்கெடுப்பு நாளில் சுற்றுலா

இந்தநிலையில், இன்று திங்கட்கிழமை மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானம் குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால், இன்றோ 20க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் குடும்பத்துடன் கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதில் ஒரு சில அதிமுக கவுன்சிலர்களும் உள்ளனர். மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கோரி மனு அளித்த கவுன்சிலர்களே தற்போது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற மாநகராட்சியில், உள்ள ஐந்தில் நான்கு பங்கு கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஓட்டு போட வேண்டும். இதன்படி மொத்தம் உள்ள 51 கவுன்சிலர்களில் 41 பேர் கூட்டத்திற்கு வந்து, தீர்மானத்தின் மீது ஓட்டளிக்க வேண்டிய நிலை உள்ளது. அதே நேரம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிக்க 5ல் ஒரு பங்கிற்கு மேற்பட்டோர் ஓட்டளிக்க வேண்டும். அதன்படி 10க்கும் மேற்பட்டோர் ஓட்டளித்தால் மேயர் பதவி தப்பும். மேயர் தரப்பை பொறுத்தவரை, தற்பொழுது வரை 13 கவுன்சிலர்கள் மேயர் தரப்பிற்கு ஆதரவாக உள்ளனர்.

ஒருவர் கூட வரவில்லை

தீர்மானம் மீது ஓட்டளிக்க வேண்டும் என்றால், கட்டாயம் 41 கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இதற்கு குறைவான கவுன்சிலர்கள் பங்கேற்றாலும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும். மேயருக்கு ஆதரவாக இருக்கும் கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தாலும், அது மேயருக்கு சாதகமாகவே முடியும்.

MayorMahalakshmi DMK

இந்நிலையில்தான், இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்க இருந்தது. நம்பிக்கையில் தீர்மானத்திற்கு தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் ஆகியவை மாநகராட்சி அதிகாரிகள் தயார் செய்து வைத்திருந்தனர். சரியாக 10 மணி அளவில் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் கூட்டம் துவங்குவதாக அறிவித்தார்.

மாநகராட்சி கூட்டம் துவங்கிய பிறகு 10:10 மணியளவில் 34 ஆவது வார்டு கவுன்சிலர் பிரவீன் குமார் கூட்டத்திற்கு வருகை புரிந்தார். வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல், நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து கொடுக்கப்பட்ட கடிதத்தில் குளறுபடி இருப்பதாக கூறி மனு ஒன்றை அளித்துவிட்டு சென்றுவிட்டார். வருகை பதிவேட்டில் கையெழுத்து போடாததால் பிரவீன் குமாரும் கூட்டத்திற்கு வராததாக கருதப்படும் என ஆணையர் கூறியும், தான் மனு கொடுக்க தான் வந்ததாக கூறி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

இதனை அடுத்து சுமார் 11:40 மணி வரை கவுன்சிலர்கள் வருகைக்காக மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் காத்திருந்தனர். தொடர்ந்து யாரும் வராததால் கூட்டம் முடிந்ததாகவும் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்துச் செய்தியாளரை சந்தித்த காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், “நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக 33 கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கூட்டம் தொடர்பான அறிவிப்பு ஒன்பதாம் தேதி அறிவித்திருந்தேன். இன்று நம்பிக்கையில்லா கூட்டம் நடைபெற்றது . அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாக்குச் சீட்டுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. எந்த மாமன்ற உறுப்பினரும் வராததால், நம்பிக்கை இல்லாத தீர்மானம் வெற்றி பெறவில்லை” என தெரிவித்தார் .

இதுகுறித்து மேயர் எதிர்ப்பு கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், மாநகராட்சி ஆணையர் மீது நம்பிக்கை இல்லை எனவும் அவர் நடத்தும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்தனர்.