Selvaperunthagai pt desk
தமிழ்நாடு

”திமுகவை விட அதிக இடங்களை ஒதுக்கினாலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை” - செல்வப்பெருந்தகை

webteam

செய்தியாளர்: மா.ராஜாராம்

மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உரையாற்றினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை பேசியபோது...

Congress

”தமிழ்நாட்டில் பாஜக நோட்டா வாக்குகளை விட குறைவான வாக்குகளையே பெறும். தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டிருந்தால் உண்மை தெரியவந்திருக்கும். தமிழக மக்களின் மனசாட்சியாக ஆட்சி செய்து வரும் முதல்வர் காங்கிரஸ் கட்சிக்கும் மனசாட்சிப்படி உரிய தொகுதிகளை வழங்குவார். 400 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். திமுகவுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளோம். எனவே, திமுகவை விட அதிக இடங்களை ஒதுக்கினாலும் அதிமுகவுடன் கூட்டணி சேரமாட்டோம்.

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு ரூ.37,000 கோடி நிவாரண உதவி கேட்ட நிலையில், பாரத பிரதமர் ஒரு பைசாகூட நிதி ஒதுக்கவில்லை. அவர் எந்த முகத்துடன் தேர்தலில் மக்களை சந்திப்பார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரண்டாவது முறையாக அடிக்கல் நாட்டியுள்ள பிரதமர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் யாரையும் அழைக்காமல் அடிக்கல் நாட்டியுள்ளனர். ராமரை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற மோடியின் எண்ணம் நிறைவேறாது” என்றார்.