தமிழ்நாடு

நிபா வைரஸ் பாதிப்பு: தற்காத்துக் கொள்வது எப்படி?

Rasus

நிபா வைரஸ் பாதிக்காமல் இருக்க செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து தெரிந்து கொள்வோம்.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதை அம்மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது. எர்ணாகுளத்தில் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவரான அவர் சக மாணவர்கள் 22 பேருடன் திருச்சூருக்கு கல்விப் பயிற்சிக்காக சென்றபோது காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவருடன் சென்ற 22 மாணவர்களும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் நிபா வைரஸ் பாதிக்காமல் இருக்க செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து தெரிந்து கொள்வோம். நிபா வைரஸ் வவ்வால்களின் எச்சில், எச்சம் போன்றவற்றால் பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் வவ்வால் கடித்த பழங்களை உண்ணாமல் தவிர்க்க வேண்டும். நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பன்றிகளுக்கு அருகில் செல்வதையும், அவற்றை தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.

மரங்களில் வவ்வால் எச்சம் படிந்திருக்க வாய்ப்பிருப்பதால் மரம் ஏறுவதை தவிர்க்க வேண்டும். வவ்வால்கள் இருக்கும் பகுதியில், குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து தனி வார்டில் சிகிச்சையளிக்கவேண்டும். நிபா பாதிப்பிருப்பவர்களை தொடுவது உள்ளிட்ட நேரடித் தொடர்புகளை தவிர்க்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நிபாவிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.