தமிழ்நாடு

என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை - மின்னணு பொருட்கள் பறிமுதல்

webteam

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனையில் ஏராளமான மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக ஏற்கனவே என்.ஐ.ஏ அதிகாரிகள் 16 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களை சென்னை, மதுரை, தேனி, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கைதான 5 பேர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது வீடுகளிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மயிலாடுதுறை, நெல்லை மேலப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் காலை முதலே சோதனை நடத்தினர். 

இந்நிலையில், சோதனையில் ஏராளமான மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லேப்டாப், 7 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், 3 மெமரி கார்டுகள், ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் ஆகிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதுகுறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் எனவும் அதன்பின்னர் மின்னணு பொருட்கள் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.