தமிழ்நாடு

திருமணத்திற்கு முந்தைய நாள் காணாமல் போன மணமகன் - நடந்தது என்ன ?

webteam

சென்னையில் இன்று திருமணம் நடக்கயிருந்த நிலையில் மணமகன் மாயமான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தை சேர்ந்தவர் சுகுமாறன் (34). இவர் விமான நிலைய கார்கோ பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு ராயப்பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அத்துடன் இன்று திருமணம் நடக்கவிருந்தது. அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று பல்லாவரத்தில் திருமண மண்டபம் பார்க்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நேற்று மாலை சிகை அலங்காரம் செய்து கொள்ள நங்கநல்லூர் செல்வதாகக் கூறி சென்ற சுகுமாறன், வீடு திரும்பி வரவில்லை. இதனால்திருமணம் நின்று இரு வீட்டாரும் சோகத்தில் மூழ்கினர். மணமகனின் வீட்டில் அவரது பெற்றோர் பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளனர். இதேபோல் பல்லாவரம் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் தரப்பில், திருமணம் நிச்சயித்து ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளனர்.

நிச்சயமானதில் இருந்து மூன்று மாதங்களாக சுகுமாறன் நன்றாக பேசி வந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென அவர் காணாமல் போனது கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் யாரையாவது காதலித்ததால் சென்று விட்டாரா ? இல்லை யாராவது கடத்தி சென்றனரா ? என்று பழவந்தாங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடைசியாக அவர் நங்கநல்லூர் சலூனிற்கு வந்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.