கோப்புப் படம் free pik
தமிழ்நாடு

ஆண் குழந்தையை சாலையோரம் தூக்கி எறிந்த அவலம்; சிகிச்சையில் முன்னேற்றம்

PT WEB

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை காவல்காரன்பட்டி பகுதிகளான உப்புகாச்சிப்பட்டி சாலையோரம், பிறந்து இரண்டரை மணி நேரமே பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியுடன், சுடிதார் துணியில் சுற்றப்பட்டு கிடந்துள்ளது. அவ்வழியாகச் சென்றவர்களுக்கு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் இருட்டு பகுதியில் டார்ச் அடித்து, குழந்தையை மீட்டு உடனடியாக அருகே உள்ள காவல்காரன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் அந்த ஆண் சிசுவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து நல்ல முறையில் மேல் சிகிச்சைக்காக குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையின் உடல் பகுதிகளில் சிறுசிறு காயங்கள் இருந்த நிலையில் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அப்பகுதியில் ஆண் சிசு இறந்த நிலையில் குப்பைத்தொட்டியில் தூக்கி எறியப்பட்டு அக்குழந்தையை நாய்கள் கடித்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

குழந்தையை யார் அப்பகுதியில் வீசிச் சென்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.