தமிழ்நாடு

தாம்பரம் டூ நெல்லை: இன்று முதல் புதிய "அன்ரிசர்வ்ட்" விரைவு ரயில்

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை இன்று முதல் முன்பதிவில்லா அந்த்யோத்யா விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அந்த்யோத்யா விரைவு ரயிலின் அறிமுக விழா தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இவ்விழாவில் மத்திய ரயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு தினசரி சேவையாக இந்தப் புதிய ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தொடக்க விழாவான இன்று மட்டும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் அந்த்யோத்யா விரைவு ரயில் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

பின்பு தினசரியாக தாம்பரத்தில் இருந்து தினசரி இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து மாலை 5.30 மணிக்கு ரயில் புறப்படும். தாம்பரம் ரயில் நிலையத்தை மறுநாள் காலை 9.45 மணிக்கு வந்தடையும். இந்தப் புதிய அந்த்யோத்யா விரைவு ரயில் அலுமினியத்தால் வடிவமைக்கப்பட்ட உள்பக்க கூரை. லக்கேஜ்கள் வைக்கப்படும் பலகைகளில் குஷன் வசதி. ரயில் பெட்டிகளில் எல்.இ.டி. விளக்குகள், செல்போன் மற்றும் லேப்-டாப் சார்ஜ் செய்வதற்கான பிளக்பாயிண்டுகள். குடிநீர் சுத்திகரிப்பான், தீயணைக்கும் கருவிகள். மேம்பட்ட குப்பை தொட்டிகள், பயோ கழிப்பறைகள் ஆகியவை இருக்கும்.