தமிழ்நாடு

ஆணவக்கொலைக்கு சிறப்புச்சட்டம் தேவை: கவுசல்யா சங்கர்

Rasus

ஆணவக்கொலை நடக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதால் ஆணவக்கொலைக்கு சிறப்புச்சட்டம் தேவை என கவுசல்யா சங்கர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் ஆண்டுகளுக்கு பின் கடந்த சில தினங்களுக்கு முன் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று செய்திளார்களிடம் பேசிய கவுசல்யா சங்கர், “ தம்பிகள் உடனிருக்கும் புகைப்படத்தை கூட  சிலர் தவறாக விமர்சிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் பலர் மன நோயாளிகள்போல் செயல்பட்டு வருகின்றனர். மரண தண்டனை விதித்தவுடன் உடனே நிறைவேற்றப்படப் போவதில்லை; இன்னமும் என்ன செய்வார்களோ என்ற அச்சம் உள்ளது. தீர்ப்பிற்கு முன்பு இருந்தே பாதுகாப்பில் தான் இருக்கிறேன். இப்போதும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுதலை செய்தவர்களால் ஆபத்து ஏற்படும் என்பதால் மேலும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆணவக்கொலை நடக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதால் ஆணவக்கொலைக்கு சிறப்புச்சட்டம் இயற்றப்பட வேண்டும் ” என கூறினார். சமூக செயற்பாட்டாளரான எவிடென்ஸ் கதிரும் கவுசல்யா உடன் இருந்தார். அப்போது பேசிய அவர், “ சில ஜாதிய அமைப்புகள் கவுசல்யா நடத்தை குறித்து தவறாக பேசியும், ஆபாசமாக பேசியும் சமுக வலைத்தளங்களில் எழுதி வருகின்றன. அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.