தமிழ்நாடு

நாமக்கல்: கணவரோடு சேர்த்து வையுங்கள்; வீட்டின் முன்பு 6 வயது மகனுடன் இளம் பெண் தர்ணா

kaleelrahman

நாமக்கல் அருகே தனது கணவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டி கணவர் வீட்டு முன்பு தனது 6 வயது மகனுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாமக்கல்லை அடுத்த விட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பணன் என்பவரை கடந்த 7 ஆண்டுகள் முன்பு பொள்ளாச்சியை சேர்ந்த சண்முகபிரியா என்பவர் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 6 வயது மகன் உள்ள நிலையில் ஓராண்டிற்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகாரறில் மனைவியை பிரிந்த கணவர் கருப்பணன் தற்போது அவரது தாயுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நாமக்கல்லில் வசித்து வரும் சண்முகப்ரியா தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவனுக்கு சிகிச்சை அளிக்க கணவர் உதவி செய்யாத நிலையில் தனது கணவர் வசிக்கும் வீட்டுக்குச் சென்ற சண்முகபிரியா தன்னுடன் சேர்ந்து வாழ கணவரை கேட்டுள்ளார்.

அப்போது அவரது கணவர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் அப்பெண் கணவனின் வீட்டின் முன்பு 6 வயது மகனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.