தமிழ்நாடு

நாமக்கல்: நண்பர்கள் இருவர் மீது சரமாரி தாக்குதல்; ஒருவர் பலி - காதல் விவகாரமா என விசாரணை

kaleelrahman

நாமக்கல் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், படுகாயமடைந்து கோமா நிலையில் மற்றொருவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேற்று மதத்தைச் சேர்ந்த சகோதரிகளை இருவரும் காதலித்தால் கொலை செய்யப்பட்டாரா என எருமப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் தாமரைக்கண்ணன், முரளி. நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று இரவு அப்பகுதியிலுள்ள சிக்கண்ணன் கோயில் அருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர்.

இதில் தாமரைக்கண்ணின் உடல் மற்றும் காதில் ரத்தம் வழிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்துள்ளார். முரளியும் மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து இருவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். இதில் தாமரைக்கண்ணன் வரும் வழியில் உயிர் இழந்து விட்ட நிலையில், முரளி உயிருக்கு ஆபத்தான நிலையில் சுயநினைவின்றி உள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருவரையும் கொலை செய்ய முயன்றவர்கள் யார் எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து எருமப்பட்டி காவல்துறையினர் நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் அப்பகுதியில் வசிக்கும் மாற்று மதத்தை சேர்ந்த சகோதரிகளை காதலித்து வந்ததும், இதுகுறித்து பெண்ணின் உறவினர்களுக்கும் இவர்களுக்கும் தகராறு இருந்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கொலை செய்தவர்களை எருமப்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.