நாமக்கல் - சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் மரணம் | பேரன் கைது புதிய தலைமுறை
தமிழ்நாடு

நாமக்கல் | சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் மரணம் - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

ஜெனிட்டா ரோஸ்லின்

நாமக்கல்லில் பூச்சி மருந்து கலக்கப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்து கொடுத்த குற்றத்திற்காக முதியவரின் பேரன் பகவதி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமக்கல் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவர் பகவதி என்பவர் சமீபத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சென்றுள்ளார். இதை தனது தாய் மற்றும் தாத்தாவிற்கு சாப்பிட கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட பகவதியின் தாத்தா சண்முகநாதன், தாய் நதியாவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், உடல்நல பாதிப்புக்கு காரணமாக இருந்த சிக்கன் ரைஸை விநியோகித்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல்வைத்தனர். மேலும், சிக்கன் ரைஸ் உணவை பரிசோதனை செய்ததில் அதில் பூச்சி மருந்து கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சண்முகம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். தாய் நதியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பேரன் சிக்கன் ரைஸில் பகவதிதான் பூச்சி மருந்து கலந்து கொடுத்துள்ளார் என தெரியவந்தது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட பகவதியிடம் பூச்சி மருந்து கலந்து கொடுத்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து காவல் துறை அளித்த தகவலில், கல்லூரி மாணவர் என்பதால் பகவதி அதிக தவறான பழக்கங்களுக்கு அடிமை ஆகியுள்ளார். இதனை பகவதியின் தாயும், தாத்தாவும் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். இதனால், கோபடைந்த பகவதி தான் வாங்கி வந்த சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்து இருவருக்கும் கொடுத்துள்ளார். இதனை வாக்குமூலமாகவே காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், பகவதியின் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.