Murder pt desk
தமிழ்நாடு

மதுரை: அமைச்சர் வீட்டருகே வாக்கிங் சென்றபோது, நாதக நிர்வாகியை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்!

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீடு அமைந்துள்ளது. இந்த சாலையில் தினசரி ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். அப்படி, இன்று காலை நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அமைச்சர் வீட்டு அருகே வந்த போது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரை விரட்டியுள்ளனர்.

`Police investigation

அப்போது ‘காப்பாற்றுங்கள்’ என கூச்சலிட்டபடி பாலசுப்பிரமணியன் ஓடிய நிலையில், மர்ம கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளது. இதில், படுகாயமடைந்த பாலசுப்பிரமணியனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக எடுத்துச் சென்றனர். மதுரையில் அமைச்சரின் வீட்டு அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலைய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையிலும், அமைச்சர் வீட்டின் முன்பாக வாக்கிங் சென்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள தல்லாகுளம் காவல்துறையினர், மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.