சக்தி ஆனந்தன் pt web
தமிழ்நாடு

“அமைதியுடன் காத்திருங்கள்.. மீண்டு வருவோம்” ப்ளே ஸ்டோரில் முடக்கப்பட்ட MYV3 ad ஆப்.. வெளியான ஆடியோ

PT WEB

பணம் வரவில்லை - குவிந்த புகார்கள்

கோவையை தலைமையிடமாகக் கொண்டு மைவி3 ஏட்ஸ் ( My V3 Ads) என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த செயலியில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் 360 ரூபாய் முதல் 1,21,000 ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் இதில் மொத்தம் சுமார் 55 லட்சம் பேர் இதில் முதலீடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் பலருக்கு கூறியபடி பணம் வரவில்லை என்ற நிலையில், புகார்கள் குவிந்தன.

பரிந்துரை இன்றி மாத்திரைகள் சட்டத்திற்கு புறம்பானது

இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார்கள் கொடுக்கப்பட்டன.

இதை அடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் மற்றும் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. பல்வேறு கட்ட நகர்வுகள் மற்றும் விசாரணைகளுக்கு பிறகு My V3 தொடர்பான வழக்கானது சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு ( EOW) மாற்றப்பட்டிருந்தது. Prize Chits & Money Circulation Schemes (Banning) Act, BUDS Act, unregulated deposit scheme உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

தற்காலிகமாக நீக்கப்பட்ட APP 

இந்த வழக்கு தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை டான்பிட் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அச்சமயம் புதிய தலைமுறையிடம் பேசிய சக்தி ஆனந்தன், “நான் ஜாமின் பெற்று வெளிவந்து தொடர்ந்து நிறுவனத்தை நடத்துவேன். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் வங்கி பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடுகள் இருந்ததால் அந்த சமயம் 2 மாதங்கள் பணம் வழக்கம் போல் வாடிக்கையாளர்களுக்கு செலுத்த முடியவில்லை” என தெரிவித்து இருந்தார்.

இத்தகைய சூழலில் My V3 செயலில் Playstore இல் இருந்து நீக்கப்பட்டு இருப்பது சந்தாதாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சக்தி ஆனந்தனின் வழக்கறிஞரிடம் நாம் பேசிய போது, “எந்த ஒரு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையில் இருக்கும் போது அவர்களது வங்கி கணக்குகள், சொத்துகள் முடக்கப்படுவது வழக்கமே. அதன் ஒரு பகுதியாகவே சக்தி ஆனந்தன் நிறுவனமாக இருக்கும் My v3 செயலி சென்னை பொருளாதார குற்றப்பிரிவினரின் பரிந்துரையின் பேரில் play store இல் இருந்து தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

நிறுவனத்தின் உரிமையாளர் ஜாமினில் வெளிவந்த பிறகு முறையான ஆவணங்களை சமர்ப்பித்து மீண்டும் செயலியை பழைய நிலைக்கு கொண்டு வருவார் என விளக்கம் அளித்துள்ளனர்.

மீண்டு வருவோம்

வழக்கறிஞர் பிரிவு இவ்வாறு கூற my V3 ad நிறுவனத்தின் YouTube பக்கத்தில் ஆடியோ மட்டும் அடங்கிய வீடியோ ஒன்று பகிரப்பட்டு உள்ளது. அதில், “சரியான முறையில் நடந்து கொண்டிருந்த நமது நிறுவனத்தின் மீது எந்த ஒரு குற்ற முகாந்திரமும் இல்லாத நிலையில், தேவையற்ற நடவடிக்கைகளுக்கு ஆளானோம்.

இதன் தொடர்ச்சியாக தற்போது ப்ளே ஸ்டோரில் நமது ஆப்பை சஸ்பெண் செய்துள்ளார்கள். இம்மாதிரியான தொடர் நடவடிக்கைகளின் மூலம் நமது ஆப் செயல்படாத நிலை ஏற்பட்டாலும், யாரும் குழப்பமோ அச்சமோ அடையத் தேவையில்லை. மாறாக அமைதியுடன் பொறுமையாக காத்திருங்கள். நாம் மீண்டு வருவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RETURN OF PROPERTY நடவடிக்கை மூலம் மீண்டும் செயலியை சக்தி ஆனந்தன் கொண்டு வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் கமெண்டில் செயலியின் உறுப்பினர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.