திமுக எம்.பி. கனிமொழி - வந்திதா பாண்டே PT Web
தமிழ்நாடு

“பெண்களுக்கு எதிரான ஆபாச பரப்புரைகளை ஏற்க முடியாது” - SP வந்திதா பாண்டேவிற்கு ஆதரவாக கனிமொழி MP!

புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவிற்கு எக்ஸ் தளம் வாயிலாக ஆதரவு தெரிவித்துள்ளார் திமுக எம்.பி. கனிமொழி.

webteam

புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே குறித்து கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். இதற்கு எதிராக பலர் குரல் கொடுத்து வந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி, வந்திதா பாண்டேவிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

கனிமொழி

இதுகுறித்து தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்.பி., “பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல்” என கூறியுள்ளார்.

மேலும், “புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் வந்திதா பாண்டே IPS அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கனிமொழி எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.