ஆ.ராசா  @dmk_raja | Twitter
தமிழ்நாடு

“மாமன்னன் படத்தை இதற்காக அனைவரும் பார்க்க வேண்டும்” - எம்.பி ஆ.ராசா சொன்ன காரணமென்ன?

“கட்சிகளை உடைப்பது பாஜகவிற்கு புதிதல்ல. வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனைகளுக்கு திமுக அஞ்சாது” என எம்.பி ஆ.ராசா பேட்டியளித்தார்.

webteam

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்களை நீலகிரி தொகுதி எம்.பி ஆ.ராசா சந்தித்து பேசினார். அப்போது மலையாளி இன மக்கள், “எங்களுக்கு இதர வகுப்பினர் என வருவாய்த் துறை மூலம் சான்று வழங்கப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் எங்களது உறவினர்களுக்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் என சான்றிதழ் வழங்கப்படுகிறது. எங்களுக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் வகுப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

A Raja

இதைத்தொடர்ந்து எம்.பி ஆ.ராசா, “மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்க தமிழக அரசு மூலம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான அரசின் கையில்தான் அது உள்ளது. இந்த ஆட்சியில் முடியாவிட்டாலும், 2024-ல் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதைத் தொடர்ந்து மலையாளி மக்களுக்கு பழங்குடியினர் சான்று பெற்றுத் தரப்படும்” என மலைக்கிராம மக்களிடம் உறுதி அளித்தார்.

Modi & Amit shah

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்ட நிலையில், இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். பாஜக தேர்தலில் மைனாரிட்டியாக ஜெயித்து மற்ற ஜெயித்த கட்சிகளை உடைத்து ஆட்சி அமைப்பது, மோடிக்கோ, அமித்ஷாவுக்கோ, பிஜேபிக்கோ புதிதல்ல. மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2024-ல் ஆட்சி மாறும். பொது சிவில் சட்டத்தை திமுக எதிர்க்கும் என திமுக தலைவர் சொல்லி இருக்கிறார். நாங்கள் 90களில் பாஜகவுடன் கூட்டணி வைத்த போது ராமர் கோயில் கட்டக்கூடாது, பொது சிவில் சட்டம் கொண்டுவரக் கூடாது என்பதை வலியுறுத்தினோம். கொள்கையில் சமரசம் செய்து கொள்ளவில்லை.

அமலாக்கத்துறை, வருமானவரித் துறை போன்ற சோதனைகளுக்கு இந்தியாவில் எந்த கட்சி அஞ்சினாலும், திமுக இதற்கெல்லாம் அஞ்சாது. தாளவாடி மற்றும் கடம்பூர் மலைப்பகுதிகளில் சிறிய பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து மாமன்னன் திரைப்படம் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், “சமூக நீதியை வலியுறுத்தும் விதமாக புதுமையான உளவியல் பாங்கினை மாமன்னன் படம் வலியுறுத்தி உள்ளது. மக்களிடத்தில் தங்களை மேல் சாதி என கருதிக் கொண்டிருந்த மனிதர்களாக இருந்தாலும், கீழ் சாதி என கருதிக் கொண்டிருந்தாலும், மனோபாவம் மாற வேண்டும். உளவியல் பார்வை மாற வேண்டும். இதைத்தான் பெரியாரும் சொன்னார். அண்ணாவும் சொன்னார். கலைஞரும் சொன்னார்.

மாமன்னன்

என்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதையும், என்னை விட பிறப்பால் தாழ்ந்தவன் இல்லை. நான் தாழ்த்தவும் மாட்டேன் என்ற தத்துவத்தை உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் முன் வைத்திருக்கிறார். இந்த கருத்தை பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் திராவிட மாடல் முன் வைத்ததாகக் கருதி அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும்” என்று கூறினார்.