தமிழ்நாடு

திருவள்ளூரில் தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்திய லாரி: பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

webteam

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தறிகெட்டு ஓடிய லாரி அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் மீது விபத்தை ஏற்படுத்திய காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. 

செங்குன்றம் அருகே பாலவாயல் சந்திப்பில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அசுர வேகத்தில் வந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த இருவேறு இருசக்கர வாகனங்களின் மீது மோதியது. இதில் தமது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த பஞ்செட்டி கிராமத்தை சேர்ந்த ஜான்சன் என்பவரும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆவடியை சேர்ந்த சந்திரபாபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்து சுஜித் லேசான காயமடைந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி ஓட்டுனரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தறிகெட்டு ஓடிய லாரி இருசக்கர வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.