தமிழ்நாடு

சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்ட சூதாட்ட கிளப்புக்கு சீல்

webteam

சென்னை கீழ்பாக்கத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த சூதாட்ட கிளப்பிற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

சென்னை கீழ்பாக்கத்தில், லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடந்து வருவதாகவும், கிளப்பில் போதைப்பொருட்கள் தயாரிக்கப்படுவதாகவும் கீழப்பாக்கம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து கிளப்பில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை வருவதை முன்னரே அறிந்த சூதாட்ட கும்பல், அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. 

திறந்த நிலையில் இருந்த கிளப்பில் இருந்து விலை உயர்ந்த மது பாட்டில்கள், சூதாட்டம் விளையாட பயன்படுத்திய சீட்டுக்கட்டுகள், போதை பொருட்கள் தயாரிப்பதற்காக வைத்திருந்த புகையிலை உள்ளிட்ட மூலப்பொருட்களையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் விக்ரம் என்பவர் சூதாட்ட கிளப்பை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்த வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையி‌னர், லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலையும், தலைமறைவான கிளப் உரிமையாளர் விக்ரமையும் தேடிவருகின்றனர்.