தமிழ்நாடு

தமிழ் கலாசாரத்தை தரமாக மொழிப்பெயர்த்த தமிழர் - யார் இந்த மதுசூதன் ?

webteam

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இடையே நடந்த உரையாடலை மொழிப்பெயர்த்த தமிழர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரதமர் மோடி இடையே மாமல்லபுரத்தில் அதிகாரபூர்வமற்ற சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இரு தலைவர்களும் குறிப்புகள் ஏதும்‌ இன்றி உரையாடினர். மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட்டவாறு இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அதிகாரிகள் இருவர் உடனிருந்தனர். அதில் ஒருவர் சீன அதிகாரி. மற்றொருவர் இந்திய அதிகாரி. 

இந்திய அதிகாரியாக செயல்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த மதுசூதன் ரவீந்திரன். இவர், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் உரையை கூர்ந்து கவனித்து அவர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்யும் நடவடிக்கை அனைவரது கவனத்தை ஈர்த்தது. மேலும், தமிழர் என்பதால் தமிழக பாரம்பரியத்தை எடுத்துரைப்பது எளிதாகவும் அமைந்தது. இரு தலைவர்களுக்கும் உரையை மொழிப்பெயர்த்த மதுசூதன் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை செயலராக உள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு முடிந்த மதுசூதன் கடந்த 2007ஆம் ‌ஆண்டு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார். சீனாவிலுள்ள இந்திய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலராக முதலில் பணி அமர்த்தப்பட்டார். 

பின்னர் சான் பிரான்சிஸ்கோவிக்கு மாற்றப்பட்ட அவர், 2013ஆம் ஆண்டில் மீண்டும் சீனாவில் பணி அமர்த்தப்பட்டார். நெடுங்காலம் சீனாவிலே வசித்து வருவதால் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரின் உள்ளிட்ட மொழிகளை நன்கு கற்றுத்தேர்ந்தார். இதன் காரணமாக கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங், பிரதமர் மோடி இடையிலான சந்திப்பின் போதும் மொழிப்பெயர்ப்பாளராக செயல்பட்டார். மதுசூதன் தற்போது சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலராக உள்ளார்.