தமிழ்நாடு

சிறுமியை காரில் கடத்திய இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Rasus

மணப்பாறை அருகே 17 வயது சிறுமியை காரில் கடத்திய இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த நடுப்பட்டி அருகே வயக்காடு பெரியார் நகரை சேர்ந்தவர் கிருத்திகா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் இவரது தந்தையும் நடுப்பட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள தனியார் குடிநீர் ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர், புதன்கிழமை இரவு இருவரும் வேலை முடிந்து இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய நிலையில், அவர்களை பின்தொடர்ந்து ஆம்னி காரில் சில இளைஞர்கள் வந்துள்ளனர். அந்த இளைஞர்கள் கிருத்திகாவின் தந்தையிடம் விலாசம் கேட்பது போல நடித்து, அவரை கீழே தள்ளி விட்டு கிருத்திகாவை கண் இமைக்கும் நேரத்தில் காரில் உள்ளே இழுத்து போட்டு சென்றனர்.

சுதாரித்து எழுந்த தந்தை, மாருதி வேனில் தொற்றிக் கொண்டே சுமார் 3 கி.மீட்டர் தூரம் சென்றுள்ளார். தகவலறிந்த அப்பகுதி கிராம பொதுமக்கள் ஆம்னி வேனை கல்லுப்பட்டி அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மரங்களை போட்டு மறிக்க முயற்சி செய்தனர். இதனால் வேன் தடுமாறி நிறுத்தப்பட அதிலிருந்து கிருத்திகாவையும், அவரது தந்தையையும் பொதுமக்கள் மீட்டனர். அப்போது வேனில் இருந்த 5 இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதில் அருகிலிருந்த மலை பகுதியில் மறைந்திருந்த 3 பேரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். முன்னதாக ஆத்திரத்தில் அவர்கள் வந்த ஆம்னி வேனை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

மேலும் தப்பி ஓடிய இருவரை கைது செய்ய வலியுறுத்திய பொதுமக்கள் திருச்சி - திண்டுக்கல் சாலை கீரனூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டனர்.

காயமடைந்த கிருத்திகா தனியார் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட கிருபாகரன், தினேஷ் மற்றும் கார் ஓட்டுனர் கிளமண்ட் சூர்யா ஆகிய மூன்று இளைஞர்களை காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையிலான வையம்பட்டி போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள குழந்தைவேலு உள்ளிட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். குழந்தைவேலு திருச்சி மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளராக உள்ளார். இவர் திருமணம் செய்யவே கிருத்திகாவை அந்த இளைஞர்கள் கடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.