தமிழ்நாடு

ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது !

ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது !

webteam

முதலமைச்சர் அறை முன்பு போராட்டம் நடத்திய ஸ்டாலினை காவல்துறையினர்  குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தை திமுக, காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், “ தூத்துக்குடி நகரமே கொந்தளிப்பாக இருக்கிறது. காவல்துறையில் துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  மாவட்ட ஆட்சித் தலைவரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் ஏதோ பெயருக்காக மாற்றம் செய்துள்ளனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தூத்துக்குடியில் இவ்வளவு சம்பவம் நடைப்பெற்றும் முதலமைச்சர் அங்கு சென்று நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இந்த அரசு செயலற்ற நிலையில் இருக்கிறது. இதற்கு முன்பு இதுபோன்ற கலவரங்கள் துப்பாக்கிச்சூடு நடைப்பெற்றுள்ளது. அப்போது எல்லாம் அரசு பொறுப்பில் இருந்த ஆட்சியாளர்கள், முதலமைச்சர்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தனர் என்பதை பார்த்துள்ளோம். 

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு நன்கு பயிற்சி பெற்ற அதிகாரிகளை வைத்து இச்சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்.எந்த ஆட்சியிலும் இதுவரை இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை. இதுகுறித்து  தற்போது பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். ஆட்சியாளர்கள் தங்களது பதவியையும் ஆட்சியையும் பாதுக்காப்பதிலே குறியாக உள்ளனர்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா வேண்டும். இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக டிஜிபி ராஜேந்திரனை பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்” எனக் கூறீனார்.

இதனையடுத்து முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டு அவரது அறை முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். முதலமைச்சர் அறை முன் 20க்கும் மேற்பட்ட  திமுக எம்.எல்.ஏக்கள் அமர்ந்து கோரிக்கை முழக்கம் எழுப்பினர். போராட்டம் நடத்திய ஸ்டாலினை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். பின்பு, தலைமைச் செயலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.