சென்னை - அரசுப் பள்ளி நிகழ்வு PT Web
தமிழ்நாடு

“தேவை அறிவியல் சிந்தனையே!”| அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய ஆன்மீக பேச்சு.. முதல்வர் ஸ்டாலின் பதிவு

Rishan Vengai

அரசுப் பள்ளிகளில் மோட்டிவேஷ்னல் பேச்சு என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. நடிகர் தாமு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பேசிய பேச்சிற்கே எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில், சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பத்மஸ்ரீ மகா விஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கு தற்பொழுது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

பாவ, புண்ணியத்தால் தான் மறுபிறவி..

அந்த நிகழ்ச்சியில் பேசிய மகா விஷ்ணு, மோட்டிவேஷனல் பேச்சு என்ற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். அதாவது, பாவ, புண்ணியம், முற்பிறவி போன்றவற்றை நியாயப்படுத்தும் வகையில் அவர் பேசினார். குருகுலக் கல்வி குறித்து பேசுகிறார், அறிவியலுக்கு புறம்பான பல விஷயங்களை போகிற போக்கில் பேசிக் கொண்டே இருக்கிறார்.

அவரின் பேச்சை தடுத்து நிறுத்தி ஆசிரியர் கேட்டதும் உங்கள் பெயரை சொல்லுங்கள் என்று உரத்த குரலில் அவர் கேட்கிறார். ‘இது தப்பு’ என்று அந்த ஆசிரியர் சொல்கிறார். மறுபிறவி பற்றி ஏன் சொல்கிறீர்கள் என்று அந்த ஆசிரியர் கேட்டதற்கு மறுபிறவி பற்றி யார் சொல்லிக் கொடுப்பார்கள்.. என்று பதில் கூறுகிறார். எதற்கு ஆன்மீக சொற்பொழிவு என்று கேட்டதற்கு ஆன்மீகம் என்றால் என்ன என்று விதண்டாவாதமாக அந்தச் சொற்பொழிவாளர் ஆசிரியரிடம் கேட்கிறார்.

நிகழ்வில் அவர் பேசியதாவது. ”ஒரு சிலர் கண் இல்லாம பொறக்குறாங்க, வீடில்லாம பொறக்குறாங்க, பல நோய்களோட பொறக்குறாங்க.. இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரே மாதிரி படைத்திருக்க வேண்டியது தானே ஏன் படைக்கவில்லை? ஒருத்தன் கோடீஸ்வரனா இருக்கான், ஒருத்தன் ஏழையா இருக்கான்.. ஒருத்தன் இப்படி இருக்கான்.. ஒருத்தன் அப்படி இருக்கான்.. ஒருத்தன் கிரிமினலா இருக்கான் ஒருத்தன் நல்லவனா இருக்கான்.. ஒருத்தன் ஹீரோவா இருக்கான் ஒருத்தன் ஹீரோ மாதிரி இருக்கான். ஏன் இந்த மாற்றங்கள். போன ஜென்மத்தில் நீங்க என்ன செஞ்சீங்களோ அதைப் பொறுத்துதான் இந்த ஜென்மம் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று பேசிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பதிவு..

அரசுப்பள்ளியில் மூடநம்பிக்கையை விதைக்கும் வகையில் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினர் கண்டங்களை தெரிவித்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளியில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!” என்று பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

முதல்வர் பகிர்ந்திருக்கும் பதிவில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்.

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!” என்று பதிவிட்டுள்ளார்.