udayanithi pt desk
தமிழ்நாடு

“நீட் தேர்வுக்கு எதிராக போராட ஒரு உதயநிதி போதாது; நீங்கள் அனைவரும்...” அமைச்சர் உதயநிதி பேச்சு

webteam

பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, “சேலத்தில் நடைபெறவிருக்கும் மாநாட்டை வெற்றி மாநாடாக நீங்கள் மாற்றிக்காட்ட வேண்டும். அண்மையில் மதுரையில், கேலிகூத்தான ஒரு மாநாடு நடைபெற்றது. அதேசமயம் நாம் மக்களின் மிக முக்கிய பிரச்னையான நீட் தேர்வுக்காக அறப்போராட்டம் நடத்தினோம்.

udayanithi stalin
நீட் தேர்வுக்கு எதிராக போராட ஒரு உதயநிதி போதாது. நீங்கள் அனைவரும் உதயநிதி போல் செயல்பட வேண்டும்.

தமிழக மக்கள் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின், பல்வேறு அற்புதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் மத்தியில் ஆளும், 9 ஆண்டுகால பா.ஜ.க அரசால் வாழ்ந்தது அதானி எனும் ஒரே ஒரு குடும்பம் மட்டும்தான். அண்மையில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கையில் மத்திய பாஜக அரசு சாலை அமைத்தல், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல திட்டங்களில் 7 லட்சம் கோடிக்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தது போல 2024-ல் அவர்களின் எஜமானர்களை விரட்டியடிக்க வேண்டும். இந்தியா எனும் நமது வீட்டில் பா.ஜ.க என்ற விஷப்பாம்பு நுழையாமலிருக்க வீட்டை சுற்றியுள்ள அதிமுக என்ற குப்பைகளை அகற்றிட வேண்டும். எனவே அதற்கு முன்னோட்டமாக நீங்கள் சேலம் மாநாட்டுக்கு வருகை தந்து, அந்த மாநாட்டை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் நீட் நுழைவுத் தேர்வால் இதுவரை 21 மாணவ மாணவிகள் பலியாகியுள்ள நிலையில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு மாணவனின் தந்தை உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. ஆனால், எதிர்கட்சியாகவுள்ள அதிமுக நீட்டை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை" என்றார்.

minister udayanithi

இக்கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் உள்பட மாநில மாவட்ட நிர்வாகிகள், இளைஞர்கள் அணியை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.