உதயநிதி pt web
தமிழ்நாடு

“முதலமைச்சருக்கு துணையாக நான் வரவேண்டுமா?” இளைஞரணி விழாவில் பேசிய உதயநிதி

PT WEB

எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிட மாட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணியின் 45-ஆவது ஆண்டு விழாவையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், துணை முதலமைச்சர் பதவி குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, “மக்களைச் சந்திப்பது எவ்வளவு முக்கியமோ, சமூக வலைதளங்களும் அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது. பாஜக பொய்யை மட்டுமே பரப்பி பொய்யை மட்டுமே பேசி அரசியல் செய்து வருகிறார்கள்.

கூட்டத்தில் பேசிய பலர் தீர்மானங்களை எல்லாம் நிறைவேற்றினீர்கள். முதலமைச்சருக்கு துணையாக நான் வரவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்கள் வதந்திகளை படித்துவிட்டு, இது நடக்கப்போகுதோ, நாமளும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்ற அடிப்படையில் பேசியுள்ளீர்கள்.

முதலமைச்சர் பலமுறை சொல்லியுள்ளார்.. இளைஞரணி செயலாளர் பொறுப்புதான் மனதிற்கு மிகமிக நெருங்கிய பொறுப்பு என சொல்லியுள்ளார். அதேபோல் எத்தனை பெரிய பொறுப்பு வந்தாலும், மனதிற்கு நெருங்கிய பொறுப்பு இளைஞரணி பொறுப்புதான். எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிட மாட்டேன்.

துணை முதலமைச்சர் பதவி குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோதுகூட, எல்லா அமைச்சர்களும் துணை முதலமைச்சர்கள்தான் என கூறினேன். இங்கிருக்கும் அத்தனை அமைப்பாளர்களும் முதலமைச்சர்களுக்கு துணையாகத்தான் இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.