Thirumavalavan Udhayanidhi pt desk
தமிழ்நாடு

“சனாதன எதிர்ப்பு குறித்து உயர் நீதிமன்றம் கூறிய கருத்துகளை சட்டப்படி சந்திப்போம்” - அமைச்சர் உதயநிதி

webteam

திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் உயர்மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது மக்களுக்குள் சாதி, மதம் மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும். குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம்.

எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது. சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டது காவல்துறையினர் தங்களுடைய கடமையை புறக்கணித்தது போன்றது. இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருந்திருக்க வேண்டும்” என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

madras high court

இந்நிலையில், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் இன்று கையெழுத்து பெற்ற அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சனாதன எதிர்ப்பு குறித்து நீதிபதி ஜெயச்சந்திரன் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, “அமைச்சர் பதவி இன்னைக்கு வரும், நாளைக்கு போகும். எம்எல்ஏ பதவி இன்னைக்கு வரும், நாளைக்கு போகும். ஆகவே அதைவிட முக்கியமாக முதலில் மனுஷனா இருக்கணும். அதனால அந்த கருத்து பத்தியெல்லாம் கவலை கிடையாது. சட்டப்படி அதை சந்திப்போம்” என்றார். தொடர்ந்து, “சனாதன பிரச்னை பல நூறாண்டு கால பிரச்னை. அதை கண்டிப்பா எந்த காலத்துலயும் எதிர்ப்போம்” என்றார்.