தா.மோ அன்பரசன் - உதயநிதி ஸ்டாலின் PT
தமிழ்நாடு

“உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் மகிழ்ச்சி..”- அமைச்சர் தா.மோ அன்பரசன்

PT WEB

காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பந்தாங்கலில் திமுகவின் இளைஞர் அணி உறுப்பின சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் புதிதாக திமுகவில் நிர்வாகிகளை சேர்க்கும் வகையில் வீடுதேடி சென்று நிர்வாகிகள் சேர்க்கை நடைபெற்றது.

தா.மோ.அன்பரசன்

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பரசன், “காஞ்சிபுரத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளிலேயே, அதிக வாக்குகளை கொடுத்து வெற்றி பெற வைத்தது ஸ்ரீபெரும்புதூர் தொகுதிதான். இந்த தொகுதியில் அண்ணன் டி.ஆர்.பாலு நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த அளவுக்கு இந்த தொகுதியில் இளைஞரணி மற்றும் மாணவர் அணியில் திறமையான உறுப்பினர்களை சேர்த்து உள்ளோம்” என்று தெரிவித்தார்.

உதயநிதி முதல்வரானால் எனக்கு மகிழ்ச்சி..

முன்னதாக நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் அன்பரசன், ”அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வரானால் அதில் எனக்கு மகிழ்ச்சியே. திமுக இல்லாத ஒரு சந்து கூட தமிழ்நாட்டில் கிடையாது. அனைத்து இடங்களிலும் திமுகவின் தொண்டர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகள் திமுக எதிர்க்கட்சியாகதான் இருந்தது. இவ்வளவு பெரிய கட்சிக்கே இந்த நிலைமை இருக்கின்றபோதில், தற்போது தனக்குக் கூட்டம் கூடுகிறது என்று நினைத்து சில நடிகர்கள் முதலமைச்சராகி விட நினைக்கிறார்கள்.

தா.மோ. அன்பரசன்

சினிமாவில் இருந்து ஒருவர் முதல்வராவது எல்லாம் எம்ஜிஆர் ஜெயலலிதாவோடு போய்விட்டது. இது தெரியாமல் எதிர்காலத்தில் முதல்வராகும் கனவோடு இருப்பவர்களின் கனவுகளை எல்லாம் பொய்யாக்க வேண்டும் என்றால், நம் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.