அமைச்சர் ரகுபதி pt desk
தமிழ்நாடு

“அரசியல் காரணத்திற்காக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்கிறார்” - அமைச்சர் ரகுபதி

webteam

செய்தியாளர்: ராஜ்குமார்

சென்னை தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “கலை மற்றும் அறிவுசார் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொலை மாநிலமாக தமிழகம் இருப்பதாக தேர்தல் தோல்வி காரணமாக பேசி வருகிறார்.

அதேபோல் அதிமுக ஆட்சியில் கொடநாடு கொலை வழக்கு நடந்ததில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி என்ன நடவடிக்கை எடுத்தார்? மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் கூட தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என பேசியது போல் தற்போதைய திமுக அரசு இல்லை.

EPS

சமீபத்தில் நடந்த சில கொலை சம்பவம் முன் விரோதம்தான் காரணமாக மட்டுமே நடந்துள்ளது. தமிழகத்தில் ரவுடிகள் பட்டியலை வைத்து ரவுடிகள் ஏ மற்றும் பி பிரிவை சேர்ந்தவர்களை காவல்துறை கையில் வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சிறப்பாக இருக்கிறது. அதனால்தான் பல முதலீட்டாளர்கள் தமிழகம் நோக்கி வருகின்றனர்.

இந்தியாவிலேயே தமிழகம் அமைதியான மாநிலமாக இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு தேவை என்றால் அதற்கான நடவடிக்கை எடுப்போம். கிளை சிறைகள் எதுவும் மூடவில்லை. சில இடத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

தருமபுரி ஆவணக் கொலை விஷயத்தில், அதை தமிழக அரசு ஆதரிக்கவில்லை. இதுபோன்ற சம்பவத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.