Ma.Subramanian pt desk
தமிழ்நாடு

“காலம் கடந்தாவது தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் வந்தால் மகிழ்ச்சிதான்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர் சந்திப்பு

Kaleel Rahman

நேற்று மதுரையில் இருந்து சென்னை சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியம், மதுரை விமான நிலையத்தை அடைந்தபோது, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அங்கு அவரிடம், கொரோனா காரணமாக விமான நிலையங்களில் விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது.

அவற்றுக்கு பதிலளித்த அவர், “விமான நிலையங்களை பொருத்தவரை ஒன்றிய அரசு, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யச் சொல்லி உள்ளது. தற்போது வரை இந்த நடைமுறைதான் பின்பற்றப்படவருகிறது. புதிதாக எதுவும் அறிவுறுத்தப்பட்டால், அதை பின்பற்றுவோம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கூட மதுரை, சென்னை, கோவை, திருச்சி ஆகிய விமானங்களுக்கு வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு சோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு விட்டுவிட்டு கொரோனா ஏற்பட்டது தெரியவந்தது.

Coronavirus

உலகம் முழுவதுமே xbb என்ற வகை வைரஸ் அதிகம் பரவி வருவதால், வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களுக்கான ரேண்டம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அப்படி இதுவரை 8 முதல் 10 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.

Covid 19

இந்தவகை உருமாறிய கொரோனாவால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. இருப்பினும் இணை நோய் உள்ளவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதேநேரம் இந்த கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் தீவிர சிகிச்சைக்கு செல்ல வேண்டிய அளவிற்கோ, ஆக்சிஜன் வைக்க வேண்டிய அளவிற்கோ பாதிக்கப்படுவதில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம்” என்றார்.

தொடர்ந்து அவரிடம், “மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “தமிழ்நாட்டில் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 11,333 மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் ஆகியோர் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை அறிவுறுத்தி, அதை உறுதிப்படுத்தி உள்ளோம்” என்றார்.

AIIMS

தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் குறித்து பேசுகையில், “ராமநாதபுரத்தில் படித்தாலாவது எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழ்நாட்டில் உறுதிப்படுத்துவார்கள் என்ற நினைப்பில்தான் தமிழக முதல்வர் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் அந்த மாணவர்களை அனுமதிக்க செய்தார். காலம் கடந்தாவது தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் வந்தால் மகிழ்ச்சியே” என கூறினார்.