அமைச்சர் தா.மோ.அன்பரசன் ட்விட்டர்
தமிழ்நாடு

“அமைச்சர் பதவியில் உள்ளதால் மட்டும்தான்...” - மிரட்டும் தொனியில் பேசிய தா.மோ.அன்பரசன்

webteam

செய்தியாளர்: சாந்தகுமார்

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71-வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், அரசு தலைமை கொறடா செழியன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன்

இந்த விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியபோது... “எவ்வளவோ பிரதமரை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால், இவ்வளவு மட்டமாக பேசக் கூடிய பிரதமரை நாங்கள் பார்க்கவே இல்லை. திமுக-வை ஒழிச்சிடுவேன்றாரு.. அது முடியுமா? ஒன்றே ஒன்று சொல்கிறேன்... திமுக சாதாரணமான இயக்கம் இல்லை, பல பேர் உயிர் தியாகம் செய்து வளர்க்கப்பட்ட இயக்கம். ரத்தத்தை சிந்தி நாங்கள் வளர்த்த இயக்கம். வரலாற்றில் இந்த திமுகவை யார் யாரோ ஒழிக்கிறேன் என சொன்னதுண்டு. ஆனால் இறுதியில் சொல்றவங்கதான் ஒழிஞ்சி போய் இருக்காங்களா தவிர இந்த இயக்கம் கம்பீரமாக நிற்கும்.

நான் அமைச்சர் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். இல்லைனா பீஸ் பீஸ் ஆக்கிடுவேன். தமிழ்நாட்டுக்கு வந்தா, நீங்க பண்ணுன சாதனைகளை வைச்சு ஓட்டு கேளுங்க. ஏன், நீங்கல்லாம் என்ன சாதனை பண்ணுனீங்கனு தெரியாதா? பிஜேபி தனியா நின்னாலும் சரி, அதிமுகவுடன் சேர்ந்து வந்தாலும் சரி, இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற போகிறது திமுகதான். இந்த தேர்தலில் 40 தொகுதியிலும் ஜெயிப்போம்” என்று பேசினார்.