நந்தி சிலை pt desk
தமிழ்நாடு

76 அடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம் - தண்ணீரில் மூழ்கிய ஜலகண்டேஸ்வரர் ஆலய நந்தி சிலை

webteam

செய்தியாளர்: பாலகிருஷ்ணன்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடிக்கும் கீழ் சரியும் பொழுது கிறிஸ்தவ கோபுரமும், 70 அடிக்கும் கீழ் சரியும் பொழுது ஜலகண்டேஸ்வரர் ஆலய முகப்பில் அமைக்கப்பட்டுள்ள நந்தி சிலையும் வெளியே தலை காட்டத் தொடங்கும்.

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் முன்னோர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக காட்சியளிக்கும் இந்த புராதான சின்னங்கள் நீர்மட்டம் 40 அடிக்கும் கீழ் சரியும்பொழுது பொதுமக்கள் அதன் அருகிலேயே சென்று கட்டிடக் கலையை கண்டு ரசிக்கவும் வழிபாடு செய்யவும் முடியும்.

Church

அந்த வகையில் கடந்த ஓராண்டாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து 40 அடிக்கும் கீழ் சென்றதால் நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் கம்பீரமாக காட்சியளித்த நந்தி சிலையை கரையோர பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அதற்கு வெள்ளை, பச்சை, ஆரஞ்சு நிற வர்ணங்களை பூசி அதனை அழகுபடுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் விடுமுறை நாட்களில் பண்ணவாடி பரிசல் துறை பகுதிக்கு வந்து நந்தி சிலையையும் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தையும் பார்த்து வழிபாடு செய்து சென்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76 அடியை கடந்துவிட்ட நிலையில் புராதான சின்னங்கள் தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் சிற்றோடையாகவும் விளைநிலமாகவும் காட்சியளித்த பண்ணவாடி நீர்த்தேக்கப் பகுதி தற்போது கடல்போல் காட்சியளிக்கிறது.