காப்பகம் - அதன் உரிமையாளர் அகஸ்டியன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கூடலூர் | அனுமதியின்றி புதைக்கப்பட்ட உடல்கள்... மனநல காப்பகத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

PT WEB

செய்தியாளர் - மகேஷ்வரன்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில் அகஸ்டியன் என்பவருக்கு சொந்தமான காப்பகமொன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகம் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்ததாக ஆட்சியரிடம் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்பேரில் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று அங்கு நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது 25 ஆண்டுகளாக உரிமம் இன்றி காப்பகம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

மனநலம் குன்றியவர்

மேலும் உரிய அடிப்படை வசதிகள் இல்லாததுடன், அங்கு பரமாரிக்கப்படுபவர்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லாமல் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதைக்கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்தடுத்த கட்ட விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றுத் திரிபவர்கள் பலரை அழைத்து வந்து காப்பகத்தில் ஊழியர்கள் தங்கவைத்தது தெரியவந்தது. கேரளாவில் இருந்தும் சிலர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த காலங்களில் இங்கு தங்கியிருந்த 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் காப்பகத்திற்கு சொந்தமான நிலத்திலேயே அவர்களை புதைத்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காப்பகத்தில் அதிகாரிகள் ஆய்வு

இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சண்முகம், நெலாக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காப்பகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள், மனநலம் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை மீட்டனர்.