முனியாண்டி கோவில் திருவிழா pt desk
தமிழ்நாடு

மதுரை: வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவில் திருவிழா – பக்தர்களுக்கு மெகா கறி விருந்து

webteam

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் வெள்ளக்கல் கிராமத்தில் கழுங்கடி முனியாண்டி சாமி கோவில் உள்ளது. இந்த முனியாண்டி கோவிலில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை திருவிழா நடத்துவது வழக்கம். இந்நிலையில், 37வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிடாவெட்டி விருந்து வழங்க காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் அன்னதான விழா நடைபெற்று வருகிறது.

கறி விருந்து

இந்த முனியாண்டி கோயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கிய ஆடுகளை இரவு முழுவதும் வெட்டி சமைத்து காலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். இந்நிலையில், இன்று 37 ஆவது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கிடாவுடன் பொங்கல் பானை ஊர்வலம் நடைபெற்றது.

இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்ட்டு முனியான்டி கோவில் முன்பு ஆட்டுக் கிடாய்கள் வெட்டப்பட்டது. இன்று அதிகாலை முதல் அந்த கிடாக்களை சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவில் பெருங்குடி, திருப்பரங்குன்றம், சிந்தாமணி, சாமநத்தம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கழுங்கடி கிடா விருந்து

இந்த ஆண்டு கழுங்கடி முனியாண்டி கோவிலில் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 450 ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டு இன்று காலை முதல் கறி விருந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரி0சனம் செய்ததோடு அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.