தமிழ்நாடு

எக்ஸ்ரே எடுக்கும் ரூமில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மெக்கானிக் 

webteam

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி மர்மமான முறையில் எக்ஸ்ரே எடுக்கும் ரூமில் இறந்துகிடந்தார். 

அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறவாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு கீதா என்ற மனைவியும் கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் மோட்டார் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இவர் தனது மனைவி கீதாவுடன் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ளார். 

அப்போது டீ வாங்குவதற்காக கீதா கடைக்கு சென்ற நிலையில் மருத்துவமனையில் இருந்த மணிகண்டன் திடீரென மாயமானார். இதையடுத்து திரும்பி வந்த கீதா எங்கு தேடியும் மணிகண்டனை காணவில்லை. 

சிறிது நேரத்தில் மருத்துவமனையில் வேலைபார்க்கும் அலுவலர்கள் எக்ஸ்ரே எடுக்கும் அறையில் ஒருவர் இறந்து கிடப்பதாக மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்தபோது இறந்துகிடப்பது மணிகண்டன் என்பது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.