மாணவர் pt desk
தமிழ்நாடு

வாணியம்பாடி: தந்தையை அவதூறாக பேசியதால் பட்டதாரி இளைஞர் எடுத்த விபரீத முடிவு

webteam

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் மணி - பேபிஅம்மாள் தம்பதியர். இவர்களுக்கு ரவிக்குமார், ராஜ்குமார், செல்வி, பழனி, பாரதி, ஆகிய 5 பிள்ளைகள் உள்ளனர். பெத்தகல்லுபள்ளி ஊராட்சியில் இவர்களுக்குச் சொந்தமான 36 சென்ட் நிலம உள்ளது.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சம்பந்த மூர்த்தி என்பவர், போலி ஆவணங்கள் மூலம் இந்த இடத்தை அபகரித்து வைத்துள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்துள்ளனர்.

கிராம மக்கள்

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனி மற்றும் அவரது குடும்பத்தினர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புத்துக்கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளனர் அப்போது இவர்களுக்குச் சொந்தமான நிலத்திற்கு சென்றபோது, நிலத்தை அபகரித்து வைத்துள்ள சம்பந்த மூர்த்திக்கும், பழனி குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த அம்பலூர் காவல்துறையினர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

இதையடுத்து தனது தந்தையை அவதூறாக ஒருமையில் பேசி திட்டியதால் மனமுடைந்த பழனியின் மகன் ஜெயபிரகாஷ் (MBA முதலாம் ஆண்டு மாணவர்) புத்துக்கோவில் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிராம மக்கள்

இதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து ஜெயப்பிரகாஷ் சடலத்தை கிராமத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர், சடலத்தை விவசாய நிலத்தில் வைத்து, போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்து வைத்துள்ள சம்பந்த மூர்த்தியை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தவரை கைது செய்ய வேண்டுமென்றும், இதே கிராமத்தில் நான்கு பேருடைய நிலத்தையும் சம்பந்த மூர்த்தி போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து வைத்துள்ளதால் அவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு சடலத்தை தகனம் செய்தனர்.