தமிழ்நாடு

மயிலாடுதுறை: இறப்பிலும் இணைபிரியாத தம்பதி - மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவர் உயிரிழப்பு!

Veeramani

மயிலாடுதுறை அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் உயிரிழந்தார். இறப்பிலும் பிரியாத தம்பதியினர் மறைவால் கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை ஊராட்சி முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் கலியபெருமாள்(88), மாரியம்மாள் (82) தம்பதியினர். கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த தம்பதிகள் மகிழ்ச்சியாக மூத்த மகன் செழியன் பாதுகாப்பில் அவர்கள் வீட்டிலேயே இருந்து வந்தனர்.

இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரியம்மாள் நேற்று இரவு உயிரிழந்தார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது இணையை பிரிந்த துக்கம் தாங்காமல் அவரது கணவர் கலியபெருமாள் அடுத்த சில மணி நேரங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்து, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து இறந்த தம்பதியினருக்கு முறைப்படி இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்தனர். மேலும், மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவத்தால் திருவாவடுதுறை கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.