தமிழ்நாடு

வேலூர்: கொரோனாவில் இருந்து மீண்டு கருப்பு பூஞ்சையால் ஒருவர் உயிரிழப்பு

jagadeesh

வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்தார்.

வேலூர் மாநகருக்குட்பட்ட சேண்பாக்கத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற 44 வயது நபர் அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். வீடு திரும்பிய இவர் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை சோதித்தபோது கருப்பு பூஞ்சை நோய் தாக்கியது கண்டறியப்பட்டது. இதையடுத்து நோய் பரவுவதை தடுப்பதற்காக அவரது இடது கண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஏற்கெனவே 40 கறுப்பு பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் ஆவர். இது தவிர திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்றையடுத்து கருப்பு பூஞ்சை நோயும் தாக்கி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.