ராடுமேன் மூர்த்தி pt web
தமிழ்நாடு

கோவை| தமிழ்நாடு முழுவதும் 68 கொள்ளை சம்பவங்கள்! ரூ.4 கோடியில் ஸ்பின்னிங் மில்லையே வாங்கிய கொள்ளையன்!

PT WEB

தமிழகம் முழுவதும் 68 கொள்ளை சம்பவங்களில் சுமார் 1,500 சவரன் நகைகள் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ராடுமேன் மூர்த்தி என்பவரை கோவை மாநகர தனிப்படையினர் கைது செய்தனர்.

கோவை, திருப்பூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிய மூர்த்தி, விருதுநகர் மாவட்டத்தில் 4 கோடி மதிப்பிலான ஸ்பின்னிங் மில் வாங்கியுள்ளார். மேலும், பேருந்து நிலையம் அருகே 53 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். தண்டவாளம் ஒட்டிய வீடுகளை குறி வைக்கும் மூர்த்தி, ஆட்களை கட்டிப்போட்டும் கொள்ளையடித்துள்ளார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த மூர்த்தி, தனது உறவினர்கள், நண்பர்களை சேர்த்துக்கொண்டு, கடந்த 4 ஆண்டுகளாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இந்த கும்பல் தமிழகம் முழுவதும் சுமார் 1,500 சவரன்களும், கோவையில் மட்டும் 376 சவரன் நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர்.

இரவு நேரங்களில் சிசிடிவி, நாய் தொல்லை இல்லாமல் இருக்க ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியது தெரிய வந்துள்ளது. ராடுமேன் மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளி அம்சராஜ் ஆகிய இருவரையும் கோவை தனிப்படை போலீஸார் கைது செய்த நிலையில், சுரேஷ்குமார் என்பவரை மதுரை போலிஸார் கைது செய்தனர்.