இறந்தவர்கள் புதியதலைமுறை
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி | சொத்து தகராறில் தந்தை, தங்கையை கொடூரமாக வெட்டிய நபர்! இரட்டைக் கொலையால் அதிர்ச்சி!

PT WEB

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் அனுபவச் சான்று வாங்க வந்த தன்னுடைய தந்தை வரதன் (வயது 85)என்பவரையும், சகோதரி மனவள்ளி (வயது 58) ஆகியோரை லவகிருஷ்ணன் (வயது 60) என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொட்டுகாரம்பட்டி கிராமத்தில் வரதன் என்பவருக்கு சுமார் 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் தந்தை வரதன், மகள் மணவள்ளி உள்ளிட்டோருக்கும் சகோதரன் லவகிருஷ்ணனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நீதிமன்றம் மூலம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரதன் மற்றும் மனவள்ளிக்கு சாதகமாக தீர்ப்பு ஆகி உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த லவகிருஷ்ணன் சொத்தை தனது பேருக்கு எழுதித் தரும்படி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், தங்கள் அனுபவத்தில் உள்ள அந்த இரண்டரை ஏக்கர் நிலத்திற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் அனுபவச் சான்று பெறுவதற்காக இன்று காத்திருந்த நிலையில், அங்கு வந்த லவகிருஷ்ணன் அவர்கள் இருவரையும் தலை கழுத்து வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். தொடர்ந்து அங்கிருந்த ஊர் மக்களிடம் தான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை காவல்துறையினர் மற்றும் ஊத்தங்கரை டிஎஸ்பி சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அங்கு வந்த லவகிருஷ்ணன் நான் தான் எனது அப்பாவையும் தங்கையையும் கொலை செய்தேன் என்று கூறி சம்பவ இடத்திலேயே காவல்துறையிடம் சரண் அடைந்தார் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.