தமிழ்நாடு

மீன் வியாபாரத்திற்கு இடையூறு: 15 நாய்களை விஷம் வைத்து கொன்றவர் கைது..!

Rasus

மீன் வியாபாரத்திற்கு இடையூராக இருந்த 15 நாய்களை விஷம் வைத்து கொலை செய்த மீன் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் கொங்கணகிரி இரண்டாம் வீதியை சேர்ந்தவர் கோபால். இவர் மீன்பிடித்து அதனை கடைகளுக்கு சென்று, விற்று வியாபாரம் செய்து வருகிறார் இந்நிலையில் இரவு நேரங்களில் இவர் மீன் பிடித்துவிட்டு தெருவில் இருசக்கர வாகனத்தில் வரும்போது, தெருக்களில் உள்ள நாய்கள் இவரைப் பார்த்து குரைத்து வந்ததால் ஆத்திரமடைந்துள்ளார்.

இதனால் மீனில் விஷம் கலந்து தெரு நாய்களுக்கு கொடுத்துள்ளார். இந்த விஷம் கலந்த மீனை உண்ட தெரு நாய்கள் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளன. இப்படி இரண்டு நாட்களில் 15 நாய்களை கோபால் விஷம் வைத்து கொன்றது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள், நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற மீன் வியாபாரி கோபால் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து 15 நாய்களை விஷம் வைத்து கொன்ற மீன் வியாபாரி கோபாலை போலீசார் கைது செய்தனர்.