தமிழ்நாடு

ரூ.1-க்கு இட்லி வழங்கும் கமலாத்தாளுக்கு புது வீடு - ஆவணங்களை வழங்கியது மஹிந்திரா குழுமம்

webteam

கோவையில் ரூ.1-க்கு இட்லி வழங்கும் கமலாத்தாள் பாட்டியை பாராட்டி, மஹிந்திரா குழுமம் அவருக்கு வீடு கட்டி தருவதற்கான ஆவணங்களை வழங்கியது. 

கோவையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என விற்பனை செய்து வருபவர் பாட்டி கமலாத்தாள். இவரது சேவையை அறிந்த மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார். இது மட்டுமல்லாமல் விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பையும்  வழங்கியிருநதார். 

இந்த நிலையில், தற்போது மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைப்ச்பேசஸ் நிறுவனம் கமலாத்தாளுக்கு சொந்தமாக நிலம் வாங்கி, அதைப் பதிவு செய்த ஆவணத்தை அவரிடம் வழங்கியுள்ளது. அந்த நிலத்தில் கமலாத்தாளுக்குக்கான வீடு மற்றும் இட்லி கடை நடத்துவதற்கான கட்டுமானத்தையும் அந்த நிறுவனம் தற்போது தொடங்கியிருக்கிறது.

அதேபோல கோவையில் உள்ள பார்த் கேஸ் நிறுவனம் ஏற்கெனவே கமலாத்தாளுக்கு இலவசமாக எரிவாயு அடுப்பு வழங்கிய நிலையில், அதற்கான எரிவாயு உருளையும் இனிமேல் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.