TTF வாசன் புதியதலைமுறை
தமிழ்நாடு

மதுரை: மீண்டும் ஒரு வழக்கில் கைதான TTF வாசன்... “படத்தில் நடிக்க இருப்பதால் ஜாமீன் வேண்டும்” என மனு!

PT WEB

பைக் ரேஸரான யூட்யூபர் TTF வாசன், அதிவேகமாக சாலையில் பைக் ஓட்டி விபத்துக்குள்ளான வழக்கில், அவருக்கு 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் TTF வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றிவருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவுசெய்தும் வருகிறார்.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு வண்டியூர் டோல்கேட் பகுதியில் TN 40 AD 1101 என்ற காரை அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகவும் செல்போனில் பேசி கொண்டே ஓட்டியுள்ளார் வாசன்.

TTF Vasan

அச்செயலை காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவு செய்து Twin Throttlers என்ற ID -ல் YOUTUBE சேனலில் பதவிட்டுள்ளார். இதைக்கண்டு மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி என்பவர் புகார் அளித்திருக்கிறார். அதன்கீழ் மதுரை அண்ணாநகர் காவல்துறையினர், TTF வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, விசாரணைக்காக சென்னையிலிருந்து TTF வாசன் கைது செய்யப்பட்டு மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். விசாரணையில், ‘மரணத்தை விளைவிக்கும் வகையில், பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன்’ டிடிஎஃப் வாசன் வாகனத்தை இயக்கியதாக 308 பிரிவின் கீழும் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்குறிப்பிட்ட வழக்குகளின்கீழ் வாசனை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன் பின்னர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அண்ணாநகர் காவல் நிலையத்தில் இருந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார் வாசன். அப்போது காவல்நிலையத்தின் முன்பாக பேசிய டிடிஎஃப் வாசன், “நான் யாருடைய உயிருக்கு பங்கம் விளைவித்தேன்? என் மீது வேண்டுமென்றே பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போதையில் காரை ஒட்டி 2 பேரை கொன்றவருக்கு பெயில் கொடுக்கப்படுகிறது. ஆனால் எனக்கு வழக்கா? சட்டம் என்பது எல்லோருக்குமானதுதான்.

ஆனால் சாலையில் மதுபோதையில் செல்பவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை. என் மீது மட்டும் போனில் அவுட் ஸ்பீக்கரில் பேசியபோதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் நீதித்துறையை நம்பியுள்ளேன், எனக்கான நீதி எனக்கு கிடைக்கணும்” என முழக்கமிட்டார். இதேபோன்று நீதிமன்ற வளாகத்தில் சென்றபோது “என்னைப் பார்த்துதான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் உள்ளது... அப்போது அவர்கள் கெட்டுப்போக மாட்டார்களா? அதுமட்டும் தெரியாதா?” எனவும் கேள்வி கேட்டு சென்றார் வாசன்.

இதற்கிடையே படத்தில் நடிக்கவிருப்பதால் ஜாமீன் வழங்கக் கோரி யூடியூபர் டிடிஎஃப் வாசன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெறவிருக்கிறது.