தமிழ்நாடு

தொடரும் அவலநிலை - கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 தொழிலாளர்கள் பலி!

kaleelrahman

மதுரையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மூன்று பேர் விஷவாயு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியின் 70 வது வார்டில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் வெளியேற்றும் தொட்டியில் மின்மோட்டார் பழுதானதாக கூறப்படுகிறது. இதனால், கழிவுநீர் தேக்கமடைந்த நிலையில், மின் மோட்டாரை வெளியே எடுத்து பழுது நீக்குவதற்காக மின் பொறியாளர்கள் நான்கு பேர் ஈடுபட்டனர். அப்போது கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய சரவணன் என்பவர் விஷவாயு தாக்கியதில் தொட்டிக்குள் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற சிவக்குமார் மற்றும் லட்சுமணன் ஆகிய இரு தொழிலாளர்களும் தொட்டிக்குள் குதித்தபோது, அவர்களும் விஷவாயு தாக்கியதால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து வெளியே நின்றிருந்த கார்த்திக் என்ற தொழிலாளர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் சிவக்குமாரை மீட்டனர். அப்போது 108 ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராத நிலையில், இருசக்கர வாகனத்தில் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்குள் தொட்டியில் விழுந்த மற்ற இருவரும் மூர்ச்சையான நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர்.

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் அவர்களை பணியில் ஈடுபடுத்தியதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய பின் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். விசாரணையில் விதிமீறல் நடந்திருப்பது கண்டறியப்பட்டால், ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதுடன், அரசு அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படம் என அவர் உறுதியளித்துள்ளார்.