தமிழ்நாடு

மதுரை : துக்க நிகழ்விற்கு செல்ல சொந்த காரை கொடுத்து உதவிய எஸ்.ஐ..!

webteam

மதுரையில் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள செல்வதற்கு வந்த நபரின் அவசர தேவைக்காக தனது சொந்த காரை கொடுத்து அனுப்பி வைத்த காவல் உதவி ஆய்வாளரின் மனித நேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மாமியார் உசிலம்பட்டி அருகேயுள்ள ஏழுமலை கிராமத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரின் இறுதி சடங்கிற்கு தனது குடும்பத்துடன் செல்ல அனுமதி கேட்டு ரவி, தெற்குவாசல் காவல் நிலையதிற்கு வந்துள்ளார்.

அப்போது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சங்கர் மாவட்ட ஆட்சியர்தான் அனுமதியளிக்க வேண்டும் என்று கூற அழுதபடியே நீங்களே அனுமதி வாங்கித் தாருங்கள் எனவும் எங்களுக்கு விபரம் தெரியாது எனவும் ரவி மற்றும் அவரது மனைவி ஜோதி கூறியுள்ளனர். எனவே உதவி ஆய்வாளர், ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ள காலையில் சம்பந்தப்பட்டவர்களை வரச் சொல்லுங்கள் அனுமதி தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் இரவே உடல் அடக்கம் செய்ய உள்ளதால் இப்போதே செல்வதற்கு ஏற்பாடு செய்ய சொல்லி தம்பதியர் கோரியுள்ளனர். மீண்டும் உதவி ஆய்வாளர் சங்கர் ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட நிலையில் அவசரம் என்றால் உங்கள் காவல்நிலையத்திலேயே அனுமதி கடிதம் கொடுத்து அனுப்புங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து உடனே கடிதம் தயார் செய்யப்பட்டு உதவி ஆய்வாளர் சங்கர் தனது சொந்த காரிலேயே அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். உதவி ஆய்வாளரின் இந்த மனித நேயம் மிக்க செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.