Police station pt desk
தமிழ்நாடு

மதுரை: காணாமல் போன இளம்பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை

webteam

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை மாவட்டம் மேலசக்குடி பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரவிசங்கர் (31) - வைஜெயந்தி (24) தம்பதியர். கடந்த 22ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற தனது மனைவி வைஜெயந்தி, மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை என மதுரை சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடிவந்தனர்.

madurai GH

இந்நிலையில் மதுரை விரகனூர் அருகே வைகை ஆற்றுப் பகுதியில் எரிந்த நிலையில் 24 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிலைமான் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், எரிந்த நிலையில் கிடந்த உடல் ரவிசங்கரின் மனைவி வைஜெயந்தி என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

சிலைமான் காவல் நிலையம்

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வைஜெயந்தியை கொலை செய்து எரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட நபர்கள், பாதியிலேயே உடலை விட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.