குழந்தையை கொலை செய்த தந்தை புதிய தலைமுறை
தமிழ்நாடு

மதுரை: போதையில் எட்டுமாத பெண் குழந்தையை தந்தையே அடித்துக்கொன்ற கொடூரம்

PT WEB

செய்தியாளர் - மதுரை பிரசன்னா

மதுரை சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரும், அதே பகுதியை சேர்ந்த நாகசக்தி என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இத்தம்பதிக்கு கிஷாந்த் (1.5 வயது) என்ற மகனும், நிதன்யாஸ்ரீ (8 மாதங்கள்) என்ற மகளும் இருந்துள்ளனர்.

தந்தை விக்னேஷ்

போதைக்கு அடிமையான விக்னேஷ், மனைவி நாகசக்தியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனைவி நாகசக்தி இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அறிந்த விக்னேஷ், மதுபோதையில் அங்கு சென்று மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

தொடர்ந்து அங்கிருந்த தன் மகன் கிஷாந்தை தூக்கிக்கொண்டு அடுத்த தெருவில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளார். பின் தொட்டியில் தூங்கி கொண்டிருந்த 8 மாதமேயான மகள் நிதன்யாஸ்ரீயை தூக்க முயன்றுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், நிதன்யாஸ்ரீயை சோழவந்தான் சாலையில் தூக்கி தரையில் அடித்துள்ளார்.

தந்தை விக்னேஷ்

இதனால் 8 மாத பெண் குழந்தைக்கு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக குழந்தையை சோழவந்தான் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அதன் பின்பு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைக்கு பலத்த காயம் இருப்பதை அறிந்து சந்தேகம் அடைந்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டது.

சோழவந்தான் போலீசார் குழந்தைக்கு எவ்வாறு பலத்த காயம் ஏற்பட்டது என விசாரணை மேற்கொள்ளும் பொழுது அதீத போதையில் விக்னேஷை குழந்தையை கொலை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் கைது செய்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

கொலை

இதுகுறித்து மதுரை புறநகர் காவல் துறை அதிகாரிகளை நாம் தொடர்பு கொண்டு கேட்கும் பொழுது, “குழந்தையை கொலை செய்த தந்தை விக்னேஷ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எட்டு மாத குழந்தையை கொலை செய்த விக்னேஷ் என்ன வகையான போதைப்பொருளை உட்கொண்டார்” என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.