தமிழ்நாடு

கொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்

கொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்

webteam

மதுரையில் கொலைக்கு சாட்சி சொன்னவரை இளைஞர்கள் சிலர் தீபாவளி அன்று கொல்ல திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ஓவியர் சுந்தர். இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எல்லீஸ் நகர் பகுதியில் வட மாநில இளைஞரை, அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவத்தை இவர் நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை காவல்துறையிடம் சாட்சியாக சொன்னதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் சுந்தருக்கு இடையூறு கொடுத்து வருவதாக தெரிகிறது. 

இளைஞர்களின் மிரட்டலுக்கு பயந்து சுந்தரின் இரண்டு குழந்தைகளையும் வெளியூரில் படிக்க வைத்துள்ளார். ஆனால் தொழில் காரணமாக எல்லீஸ் நகரில் வசிக்கும் ஓவியருக்கும், அவருடைய மனைவிக்கும் அந்த இளைஞர்கள் அடிக்கடி கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என சுந்தர் குற்றம்சாட்டுகிறார். இந்நிலையில் வரும் தீபாவளி அன்று இளைஞர்கள் இவரை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக சுந்தர் அச்சம் கொண்டுள்ளார். 

மேலும் கொலை செய்வதற்காக எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த ‘பலூன்’ சதீஷ், ‘ஒண்டிப்புலி’ கார்த்திக், காசி ஆகிய மூன்று இளைஞர்களும் சபதம் எடுத்துள்ளதாகவும் சுந்தர் கூறுகிறார். இதனால் தனது உயிரை காப்பாற்றவேண்டும் என காவல்துறைக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ள சுந்தர், கண்ணீர் மல்க பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். கொலைக்கு சாட்சி சொன்னவரை ஒரு கும்பல் நாள் குறித்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் புகார் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.