Cool lip case - madurai high court pt web
தமிழ்நாடு

"கூல் லிப்" உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என ஏன் அறிவிக்கக்கூடாது? - நீதிமன்றம்

PT WEB

கூல் லிப் தயாரிப்பு நிறுவனங்கள் COTPA விதிகளுக்கு உட்படும் என்றால், அதில் அபாயத்தை குறிப்பிடும் மண்டை ஓட்டு அடையாளம் ஏன் அச்சிடப்படவில்லை? என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

ஜாமின் மற்றும் முன் ஜாமின் கோரும் வழக்குகள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கூல் லிப்பை விற்பனை செய்த வழக்கில் ஜாமின், முன் ஜாமின் கோரிய வழக்குகளை விசாரித்த நீதிபதி, சமீபத்தில் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களை அழைத்து, "கூல் லிப்" உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார். அது தொடர்பாக ஹரியானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

குட்கா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், " தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 10% குழந்தைகள் ஏதேனும் ஒரு போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். குடும்ப பிரச்சனை, தனிநபர் துன்புறுத்தல்கள் போன்ற காரணங்களால் போதை மருந்துகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை COTPA விதிகளால் முறைப்படுத்தப்படுகிறது. COTPA விதிகளின் படி எச்சரிக்கை விடும் வகையிலான வாசகங்கள், புகைப்படங்கள் பாக்கெட்டுகள் மீது அச்சிடப்பட்டுள்ளது. சிரப்களை போதைப்பொருட்களாக பயன்படுத்துவது போன்ற சம்பவங்களும் நிகழ்கின்றன. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், "மத்திய அரசு மெல்லும் வகையிலான போதை பொருட்களுக்கு தடை விதிக்க கோரி அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சில மாநிலங்கள் அதை பின்பற்றும் சூழலில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கூல் லிப் தயாரிப்பு நிறுவனங்கள் கோட்பா விதிகளுக்கு உட்படும் என்றால், அதில் அபாயத்தை குறிப்பிடும் மண்டை ஓட்டு அடையாளம் ஏன் அச்சிடப்படவில்லை? அதோடு அதன் மீது இருக்கும் எச்சரிக்கை வாசகம் "Tobacco users die younger" என உள்ளது.

அதனை "புகையிலை பயன்படுத்துபவர்கள் இளமையிலேயே இறக்கிறார்கள்" என பொருள் கொள்ளாமல், "இறக்கும் போதும் இளமையாக இருக்கலாம்" என தவறாக புரிந்து கொண்டால் ,அது விளம்பரம் போல் ஆகிவிடும். ஆகவே கோட்பா சட்டம், விதி 7 இன் கீழ் புகையிலை போதைப் பொருட்களின் பாக்கெட்டுகளில் அபாயத்தை குறிப்பிடும் மண்டை ஓட்டு படம் அச்சிடப்படுவது தொடர்பாக குட்கா நிறுவனங்கள் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் ”என உத்தரவிட்டார்.

தொடர்ந்து போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்கு வேறு எம்மாதிரியான எச்சரிக்கைகளை வழங்கலாம்? என்பது தொடர்பாக மத்திய, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.