தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்க வேண்டும்: எஸ்.பிக்கு நீதிமன்றம் உத்தரவு

webteam

ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி எஸ்.பிக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 52வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஸ்டெர்லைட் ஆலையின் சட்டப்பிரிவு பொதுமேலாளர் சத்யபிரியா மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தவறான தகவல்களை பரப்பி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆலைக்கு வாகனங்கள் சென்று வர முடியவில்லை. மேலும் தொழிற்சாலை பணியாளர்களுக்கும், தொழிற்சாலை சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கபோவதாகவும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் வருகின்றன. சிலர் தற்கொலைப்படையாக மாறி ஆலைக்கு சேதம் விளைப்பதாக கூட்டங்களில் பேசுகின்றனர். ஆலை ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூக்குக்குடி எஸ்.பிக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை முன் போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்புக் கோரி புதிய மனு தாக்கல் செய்ததால், பாதுகாப்பு வழங்க எஸ்பிக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.