தமிழ்நாடு

குழந்தைகளை மீண்டும் சேர்த்து வைக்கக்கோரி பெண் மனு: ஆட்சியருக்கு நோட்டீஸ்

Rasus

வேறு காப்பகத்தில் விடப்பட்டுள்ள, தனது காப்பகத்தில் வளர்ந்த இரு பெண் குழந்தைகளையும் மீண்டும் தன்னிடம் சேர்த்து வைக்கக்கோரிய வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த கிறிஸ்டி வளர்மதி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் " நானும் எனது கணவரும் இணைந்து சமூக நலத்துறை அனுமதி பெற்று பள்ளத்திவயல் ஐடிஐ அருகில் ‘தி கிங்டம் ஆஃப் காட் டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளையின் கீழ் 10 ஆண்டுகளாக குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லம் நடத்தி வந்தோம்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகள் காப்பகத்திற்கு ஆய்விற்கு வந்தனர். அப்போது காப்பகத்தில் 15 குழந்தைகளுக்கு போதுமான இடவசதி இல்லை எனக் கூறி பெண் குழந்தைகளை உரிய பெற்றோரிடம் ஒப்படையுங்கள், பிறகு காப்பகத்திற்கு அனுமதி தருகிறோம் என்றனர். அதன்படி 7 ஆண் குழந்தைகளை மட்டும் வைத்து கொண்டு 24.01.2017 அன்று பெண் குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்தோம். இதில் கேத்ரின்(10), நான்சி (7) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் என் மீது அதிகம் பாசம் கொண்டதால் என்னைவிட்டு பிரிய முடியாமல் கதறி அழுதனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால் 03.01.2017 அன்று குழந்தைகளை என்னுடன் அனுப்பி வைத்தனர். ஆனால் அதன்பின் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள் இரு குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக என்னிடம் இருந்து பிரித்து வேறு தனியார் காப்பகத்தில் சேர்த்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் தனிபிரிவு, இந்திய பிரதமர் ஆகியோருக்கு மனு அனுப்பினேன். ஆனால் எந்தவொரு பதிலும் வரவில்லை. மேலும் குழந்தைகள் இல்லாமல் நானும், நான் இல்லாமல் குழந்தைகளும் மிகுந்த மன கஷ்டத்தில் உள்ளோம்.எனவே குழந்தைகளை என்னிடம் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி., ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.